இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள 19 வயதுக்குட்பட்டோர் இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடம் பெற்றுள்ளார். இலங்கையில் இரண்டு 4 நாள் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது.
இந்நிலையில் இந்தியா யு-19 - இலங்கை யு-19 அணிகளுக்கு இடையிலான முதல் நான்கு நாள் போட்டி இன்று கொழும்பில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பெற்றார்.
தொடக்க வீரர் மிஷாராவின் விக்கெட்டை எல்பிடபிள்யூ முறையில் வீழ்த்தினார் அர்ஜூன் டெண்டுல்கர். 12 பந்துகளில் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார். இந்திய அணி சார்பாக அர்ஜூன் வீழ்த்தும் முதல் விக்கெட் இது.
முதல்நாள் உணவு இடைவேளையின்போது இலங்கை யு-19 அணி 26 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்துள்ளது. அர்ஜூன் 5 ஓவர்கள் வீசி 18 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்துள்ளார்.