டாக்கா: ஐபிஎல் உள்ளிட்ட வெளிநாட்டு லீக் போட்டிகளில் ஆட பிரபல வங்கதேச வீரர் முஸ்தாபிஜூர் ரகுமானுக்கு 2 ஆண்டுகள் தடை விதித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது.
வங்கதேச அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முஸ்தாபிஜூர் ரகுமான், இந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். அப்பொழுது முழங்காலில் காயம் அடைந்தார். இதன் காரணமாக ஓய்வு எடுக்க வேண்டிய கட்டாயத்தினால் அவர் சமீபத்தில் நடந்த வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான வங்கதேச அணியில் இடம் பெற இயலவில்லை. அந்தத் தொடரை வங்கதேச அணி 0-2 என்ற கணக்கில் இழந்தது.
இந்நிலையில் ஐபிஎல் உள்ளிட்ட வெளிநாட்டு லீக் போட்டிகளில் ஆட முஸ்தாபிஜூர் ரகுமானுக்கு 2 ஆண்டுகள் தடை விதித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது.
இது குறித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியத் தலைவர் நஸ்முல் ஹஸ்சன் கூறியதாவது;
வெளிநாட்டு 20 ஓவர் லீக் போட்டியில் ஆடி காயம் அடைந்த காரணத்தால் தாய்நாட்டு அணிக்காக முஸ்தாபிஜூர் ரகுமான் விளையாட முடியாமல் போனது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஐ.பி.எல். உள்ளிட்ட வெளிநாட்டு 20 ஓவர் லீக் போட்டிகளில் விளையாட அவருக்கு வாரியத்தில் இருந்து தடையில்லா சான்றிதழ் அளிப்பதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.