"விளையாடு இந்தியா' திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறுவதற்காக 734 பேரை இந்திய விளையாட்டு ஆணையம் (சாய்) தேர்வு செய்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ் திறமை வாய்ந்த வீரர், வீராங்கனைகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களது திறமையை மேம்படுத்த உதவியளிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக சாய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
விளையாடு இந்தியா திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற 734 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆண்டு உதவித்தொகையாக தலா ரூ.1.2 லட்சம் 4 தவணைகளாக பிரித்து வழங்கப்படும். அரசு அங்கீகாரம் பெற்ற உறைவிட வசதியுடன் கூடிய விளையாட்டு அகாதெமிகளில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
இதன் ஒரு பகுதியாக சாய் சார்ந்து இல்லாத 21 தனியார் அகாதெமிகளுக்கும் உயர் அதிகாரக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன் மூலமாக சிறந்த பயிற்சி பெற வீரர், வீராங்கனைகள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய தேவையை குறைக்க முயற்சிக்கப்படுகிறது.
விளையாடு இந்தியா திட்டத்தின் கீழ் பலன்பெற வேண்டிய பயனாளர்களை "திறமையை அடையாளம் காணும் குழு' கண்டறிந்து அரசுக்கு பரிந்துரை செய்தது. இந்தக் குழுவில் அர்ஜுனா, துரோணாச்சார்யா விருது பெற்றவர்கள் உறுப்பினர்களாக இருந்தனர்.
தேர்வு செய்யப்பட்டவர்களின் திறமை மற்றும் வயதை கண்டறிவதற்கான சோதனைகள் அறிவியல்பூர்வமாக நடத்தப்பட்டன. உரிய தகுதி நிலையை எட்டாத பட்சத்தில், சம்பந்தப்பட்ட வீரர், வீராங்கனைகள் உதவித் தொகை திட்டத்திலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.