தனிப்பட்ட பங்களிப்புகள் ஓர் ஆட்டத்தை வெல்ல உதவலாம். ஆனால் தொடரை வெல்ல உதவாது என முன்னாள் வீரரும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான மதன் லால் கூறியுள்ளார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டி 20, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. டி 20 தொடரை இந்தியாவும், ஒரு நாள் போட்டித் தொடரை இங்கிலாந்தும் வென்றன. இந்நிலையில் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி பர்மிங்ஹாமில் தொடங்குகிறது.
இந்தத் தொடர் குறித்து மதன் லால் கூறியுள்ளதாவது:
ஒரு புவனேஸ்வர் குமாராலோ ஒரு பூம்ராவாலோ டெஸ்ட் தொடரை வென்றுவிடமுடியாது. 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஓர் அணியில் உள்ள அனைத்து பந்துவீச்சாளர்களும் சிறப்பாகப் பந்துவீச வேண்டும். ஒரு செஸனில் கூட பின்தங்கிவிடக் கூடாது. சுழற்பந்து வீச்சாளருக்கு உதவும்படி தகுந்த அழுத்தங்களை வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாக்க வேண்டும்.
ஷமி மனத்தளவில் சரியாக இல்லாமல் இருந்தால் அதைத் தேர்வுக்குழுவினரிடம் தெரிவித்திருக்க வேண்டும். அதன்படி தேர்வுக்குத் தன்னை முன்னிறுத்தாமல் இருந்திருக்கலாம். ஆனால் அவர் சர்வதேச வீரர். தான் மீண்டு வந்துள்ளதைத் தொடரின் மூலம் உலகுக்கு அறிவிக்க வேண்டும்.
உமேஷ் யாதவ் ஐபிஎல் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசினார். ஆனால் அதன்பிறகு ஒருநாள் நன்றாகப் பந்துவீசுகிறார். அடுத்த நாள் அப்படியே வேறு மாதிரி பந்துவீசுகிறார். நிலைத்திறன் அவரிடம் இருப்பதில்லை. வெளிநாடுகளில் இந்திய அணியின் வெற்றிக்கு அவர் எப்போது உதவப் போகிறார்? அவர் தன்னை முன்னேற்றிகொள்ள வேண்டும்.
தனிப்பட்ட பங்களிப்புகள் ஓர் ஆட்டத்தை வெல்ல உதவலாம். ஆனால் தொடரை வெல்ல உதவாது. ஒட்டுமொத்தப் பந்துவீச்சாளர்களும் சிறப்பாகப் பந்துவீசினால்தான் தொடரை வெல்ல முடியும் என்று கூறியுள்ளார்.