கோலாலம்பூரில் நடைபெற்று வரும் 6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை மகளிர் டி20 போட்டியின் முதல் ஆட்டத்தில் மலேசியாவை 142 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் தாய்லாந்தை வெற்றி பெற்றது.
இந்நிலையில் மூன்றாவது ஆட்டத்தில் வங்கதேச அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஹர்மண்ப்ரீத் கெளர் அதிகபட்சமாக 37 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். தீப்தி சர்மா 32 ரன்கள் எடுத்தார்.
இதன்பிறகு ஆடிய வங்கதேச அணி, 19.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஃபர்கானா 52 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ருமானா அகமது 34 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து அவரும் ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு உதவினார். இதனால் இந்திய அணி எதிர்பாராதவிதமாகத் தோல்வியைச் சந்தித்தது.
மகளிர் ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி சந்திக்கும் முதல் தோல்வி இது. இதற்கு முன்பு 20 ஒருநாள், 12 டி20கள், 2 ஒருநாள் என இப்போட்டியில் விளையாடிய 34 முறையும் வெற்றிகண்டுள்ளது. இன்று முதல்முறையாக தோல்வியடைந்துள்ளது.