ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தால் தடை செய்யப்பட்டுள்ள டேவிட் வார்னர், கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் விளையாடவுள்ளார்.
பந்து சேதப்படுத்திய குற்றம் தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தால் ஒரு வருடம் தடை செய்யப்பட்டுள்ள டேவிட் வார்னர், கரீபியன் ப்ரீமியர் லீக் தொடரில் செயின்ட் லூசியா அணிக்காக விளையாடுகிறார். இதை அந்த அணியின் மேலாளர் முகமது கான் உறுதிபடுத்தினார். மேலும் அவர் அந்த அணிக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
செயின்ட் லூசியா அணியில் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த ஆஸ்திரேலிய அணியின் டி ஆர்கி ஷார்ட், அந்த சமயத்தில் இந்தியா சுற்றுப்பயணம் செய்யும் ஆஸ்திரேலிய ஏ அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதால் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். தற்போது அவருக்கு மாற்று வீரராக டேவிட் வார்னர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவரும் இதில் பங்கேற்பதை உறுதிபடுத்தியுள்ளார்.
கரீபியன் ப்ரீமியர் லீக் தொடர் ஆகஸ்ட் 8-ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 16-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
முன்னதாக, பந்துவீச்சு சர்ச்சையால் ஆஸி. கிரிக்கெட் வாரியத்தால் தடை செய்யப்பட்டதால் ஐபிஎல் போட்டிகளிலும் பங்கேற்க டேவிட் வார்னருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், குளோபல் டி20 லீக் கனடா மற்றும் டார்வினில் நடைபெறும் நார்த்தன் ஸ்டிரைக் லீக் உள்ளிட்ட தொடர்களிலும் வார்னர் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.