சோச்சி: உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் மைதானத்தில் புகைபிடித்தற்காக, அர்ஜென்டினாவின் முன்னாள் நட்சத்திர வீரர் மாரடோனா மன்னிப்புக் கோரியுள்ளார்.
அர்ஜென்டினாவைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் டிகோ மாரடோனா. உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்த பொழுதும், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி கொண்டவர் அவர். குறிப்பாக ஊக்க மருந்து பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார்.
இந்நிலையில் மாரடோனா தற்பொழுது புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். ரஷ்யாவில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில், அர்ஜென்டினா- ஐஸ்லாந்து மோதிய ஆட்டத்தை அவர் நேரில் சென்று ரசித்தார். பார்வையாளர் மாடத்தில் இருந்த அவர் புகை பிடித்த காட்சிகள் வெளியாகின.
பொதுவாகவே உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெறும் மைதானங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் அதையும் மீறி மாரடோனா புகை பிடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதனை அடுத்து கால்பந்து மைதானத்தில் புகைபிடித்ததற்காக மாரடோனா தனது முகநூல் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.