2019 நடைபெறவுள்ள உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் தேர்வாக வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர் மைக்கெல் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் பேசியதாவது:
உலகக் கோப்பை நடைபெறவுள்ள இந்த தருணத்தில் ஒரு அணியில் வீரர்களுக்கு இடையிலான புரிந்துணர்வு மிக அவசியம். ஆனால் ஆஸ்திரேலிய அணியில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்களால் அந்த சாத்தியக்கூறு அமையவில்லை. திறமையான வீரர்கள் சிலர் அணியில் இடம்பிடித்திருந்தாலும் அவர்களுக்கு இடையிலான புரிந்துணர்வு கேள்விக்குரியாகவே உள்ளது.
சிறந்த தலைமைப் பண்பு உள்ளவர்கள் என்ற காரணத்துக்காக நாம் வீரர்களை தேர்வு செய்யக் கூடாது. அவர்களின் திறமை எப்படி வெளிப்படுகிறது என்பதையும் கவனிக்க வேண்டும். அடுத்த 12 மாதங்கள் வரை ஆஸ்திரேலிய அணியில் டிம் பெய்ன் இடம்பெறுவார் என்று நிச்சயமாக கூற முடியாது. எனவே சரியான மாற்று வீரர்களை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் இப்போதே தேர்வு செய்ய வேண்டும்.
ஆரோன் பிஞ்ச், சிறந்த துவக்க வீரர், அதிரடி ஆட்டக்காரர். ஆனால் அவர் நடுவரிசையிலும் நன்றாகவே செயல்படுகிறார். இருப்பினும் அவரை துவக்க வீரராக களமிறக்குவதுதான் ஆஸ்திரேலிய அணிக்கு சரியாக இருக்கும். அப்போதுதான் அவராலும் இயல்பாக ஆட முடியும்.
உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது. வருகிற மார்ச் மாதத்துடன் அவர்களது தடைக்காலம் முடியும் நிலையில், ஆஸ்திரேலிய அணியில் நிச்சயம் இடம்பிடிப்பார்கள் என்று நம்புகிறேன்.
இந்த தடைக்காலத்தில் அவர்களது நடவடிக்கைகள் சரியாக அமைந்தால் வாய்ப்பு நிச்சயம் ஏற்படும். மேலும் சில டி20 தொடர்களிலும் இவர்கள் இருவரும் பங்கேற்பதால், ஆட்டத்திறனும் பாதிக்க வாய்ப்பில்லை. தடை முடிந்த பின்னர் ஆஸ்திரேலிய அணியில் நேரடியாக இடம்பிடிப்பது சிரமமாக இருந்தாலும், உடற்தகுதி, ஆட்டத்திறன் ஆகியவற்றை கணக்கில் கொண்டு செயல்பட வேண்டும். ஏனெனில் இவர்கள் இருவரும் உலகளவில் சிறந்த வீரர்கள் ஆவர் என்றார்.