இலங்கை கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப் பயணம் செய்து வருகிறது. செயின்ட்லூசியாவில் இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணியினர் பந்தின் நிலையை மாற்ற முயன்றதாக நடுவர்கள் அலீம் தர், இயான் கெளட் ஆகியோர் புகார் செய்தனர். இதனால் சனிக்கிழமை 2 மணி நேரம் போட்டியில் பங்கேற்காமல் சண்டிமல் தலைமையில் இலங்கை அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் ஐசிசி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்ததால் இலங்கை வீரர்கள் மீண்டும் ஆடத்தொடங்கினர். கடைசியில் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
ஐசிசி நடத்தை விதிகள் 2.2.9. மீறியதாக சண்டிமால் மீது குற்றம் சாட்டப்பட்டது. பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் சண்டிமலுக்கு ஒரு டெஸ்டில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து மேற்கிந்தியத் தீவுகள் - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்டில் சண்டிமலால் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு டெஸ்ட் தடை மட்டுமல்லாமல் சண்டிமலுக்கு 2
அபராதப் புள்ளிகளும் ஆட்ட ஊதியத்திலிருந்து 100 சதவிகிதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளன. இந்தத் தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் சண்டிமல். எனினும் அவருடைய மேல்முறையீடை ஐசிசி சட்ட நிபுணர் தள்ளுபடி செய்தார்.
இதுதவிர, டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 2 மணி நேரம் போட்டியில் பங்கேற்காமல் இருந்ததும் சிக்கலை வரவழைத்துள்ளது. இதற்கு உடந்தையாக இருந்ததாக கேப்டன் சண்டிமல், இலங்கை அணியின் பயிற்சியாளர் சந்திகா, மேலாளர் அசங்கா குருசின்ஹா ஆகியோர் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான விசாரணை ஜூலை 10-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதையடுத்து இலங்கை அணியின் புதிய கேப்டனாக வேகப்பந்துவீச்சாளர் சுரங்கா லக்மல் நியமிக்கப்பட்டுள்ளார். மூன்றாவது டெஸ்டுக்கு அவர் கேப்டனாகச் செயல்படுவார்.
இன்று தொடங்கவுள்ள மூன்றாவது டெஸ்ட் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.