இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடவுள்ள அயர்லாந்து அணியில் மொஹாலியைச் சேர்ந்த வீரர் இடம்பிடித்துள்ளார்.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணி, அயர்லாந்துக்கு எதிராக 2 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான அயர்லாந்து அணியில் இந்திய வம்சாவளி வீரரான மொஹாலியைச் சேர்ந்த சிம்ரன்ஜித் சிங் (வயது 31) இடம்பிடித்துள்ளார்.
சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டரான இவர் சமீபத்தில் நெதர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கினார். அதில் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான போட்டி குறித்து அவர் கூறியதாவது:
மொஹாலி அணிக்கு விளையாடிய நாள் முதல் இந்திய அணியில் இடம்பிடிப்பதுதான் எனது லட்சியமாக இருந்தது. அப்போது பஞ்சாப் அணியில் இடம் கிடைக்காத காரணத்தால் மேற்படிப்புக்காக அயர்லாந்து வந்தேன். இந்நிலையில், கடந்த ஆண்டு எனக்கு அயர்லாந்து குடியுரிமை கிடைத்தது. மேலும் அயர்லாந்து கிரிக்கெட் அணியில் விளையாடவும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அயர்லாந்தில் நானும் பயிற்சி மேற்கொண்டு, சிறுவர்களுக்கும் பயிற்சி அளித்து வரும் அதே மைதானத்தில் தற்போது இந்திய அணிக்கு எதிராக விளையாடவுள்ளேன். இது எனக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஸ்காட்லாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட அணிகளுடன் சிறப்பாக செயல்பட்டிருக்கிறேன். அது எனது ஆட்டத்திறனையும் மேம்படுத்தியுள்ளது. எனது வாழ்நாளில் இது மிகப்பெரிய தருணம் என்றார்.