அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, புதிய சாதனைப் படைக்கும் அரிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி, அயர்லாந்துக்கு எதிராக 2 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தனது 100-ஆவது டி20 போட்டியில் களமிறங்குகிறது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதில் இந்திய கேப்டன் விராட் கோலி, 2,000 ரன்களைக் கடந்த முதல் இந்தியர் மற்றும் உலகளவில் 3-ஆவது வீரர் எனும் சாதனையைப் படைப்பார். இந்த சாதனைக்கு இன்னும் 17 ரன்கள் மட்டுமே தேவை. மேலும் டி20 போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்த முதல் வீரர் ஆவார்.
அதுமட்டுமல்லாமல் டி20-யில் வேகமாக ஆயிரம் ரன்களைக் கடந்தவரும் கோலி தான் என்பது குறிப்பிடத்தக்கது. பிரண்டன் மெக்கல்லம் 67 போட்டிகளிலும், மார்டின் கப்டில் 73 போட்டிகளிலும் 2 ஆயிரம் ரன்களைக் கடந்து முதல் இரு இடங்களில் உள்ளனர்.
கடந்த 2012-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் டி20-யில் விளையாடிய உமேஷ் யாதவ், அதன் பின்னர் இந்திய அணி விளையாடிய 65 டி20 ஆட்டங்களிலும் பங்கேற்றதில்லை (இப்போட்டி உட்பட) என்பது குறிப்பிடத்தக்கது.