சீமா புனியாவிடம் ஊக்கமருந்து பரிசோதனை

தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற சீமா புனியாவிடம், தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (நாடா) பரிசோதனை நடத்த உள்ளது.
சீமா புனியாவிடம் ஊக்கமருந்து பரிசோதனை

தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற சீமா புனியாவிடம், தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (நாடா) பரிசோதனை நடத்த உள்ளது. எதிர்வரும் கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் போட்டிக்கு முன்பாக இச்சோதனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெறும் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கடந்த 5-ஆம் தேதி சீமா புனியா வட்டு எறிதலில் 61.05 மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றார். காமன்வெல்த் போட்டிக்கான தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருந்த 59 மீட்டரை அவர் கடந்ததால், காமன்வெல்த் வாய்ப்பையும் அவர் உறுதி செய்தார்.
இந்நிலையில், அவரிடம் ஊக்கமருந்து சோதனை நடத்துவது தொடர்பாக இந்திய தடகள சம்மேளன அதிகாரிகள் கூறியதாவது:
சீமாவிடம் ஊக்கமருந்து பரிசோதனை நடத்த நாடா அதிகாரிகள் மார்ச் 5-ஆம் தேதி பாட்டியாலா வரவில்லை. 6-ஆம் தேதி அவர்கள் வந்தபோது, சீமா வீட்டுக்குச் சென்றிருந்தார். எனவே, சீமாவிடம் பரிசோதனை மேற்கொள்ள சரியான இடத்தை கேட்குமாறு நாடா அதிகாரிகள் கேட்டிருந்தனர்.
அதன்பேரில் நாங்கள் சீமாவை தொடர்பு கொண்டு நாடா அதிகாரிகளுக்கு தகவல் அளித்தோம். தற்போது சீமாவின் மாதிரிகளைப் பெற ஹரியாணா மாநிலம் சோனிபட்டுக்கு நாடா அதிகாரிகள் செல்கின்றனர் என்று அவர்கள் கூறினர்.
இதனிடையே, ஆடவருக்கான கம்பு ஊன்றித் தாண்டுதலில் தமிழக வீரர் சுப்ரமணி சிவா தேசிய சாதனையுடன் தங்கம் வென்றிருந்தார். தேசிய சாதனையை அங்கீகரிக்கத் தேவையான நடைமுறையாக, போட்டி நடைபெற்ற 24 மணி நேரத்துக்குள்ளாக அவரிடம் ஊக்கமருந்து பரிசோதனை நடத்தப்பட வேண்டும். அதன்படி, போட்டி நடைபெற்ற அடுத்த நாளே சிவாவிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் இந்திய தடகள அணி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com