ஒருமாத முழு ஓய்வில் உள்ளார் விராட் கோலி. இலங்கையில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக பெங்களூர் அணி சார்பாக ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளார்.
சரி, இந்த ஓய்வுக்காலங்களில் கோலியின் உணவுப்பழக்கம் எப்படி இருக்கும்? எல்லாவற்றையும் வெளுத்துக்கட்டுவாரா அல்லது அப்போதும் என்ன சாப்பிடுகிறோம் என முழுக் கவனத்துடன் இருப்பாரா?
கோலி அளித்துள்ள பதில்:
ஓய்வு காலங்களில் க்ளூடன் இல்லாத உணவுகளைச் சாப்பிடுவேன். (கோதுமையில் உள்ள மாவுச்சத்தைத் தாண்டி, அதில் உள்ள தீமை விளைவிக்கும் புரதம் - க்ளூடன்). மாவுச்சத்து உணவு இல்லாமல் உங்களால் வாழமுடியாது. ஒரு மனிதனாக நீங்கள் மாவுச்சத்து உணவைக் கட்டாயம் உண்ண வேண்டும். ஆனால் எந்த வகையிலான மாவுச்சத்து உணவை உண்கிறீர்கள் என்பது முக்கியம். அதில் தான் நான் கவனமாக இருப்பேன்.
ஆறு வருடங்களாக மாவுச்சத்து உணவில்லாமல் வாழ்பவர்களைக் கண்டுள்ளேன். அதை என்னால் நம்பவேமுடியாது. அப்படி நான் இருந்தால் மருத்துவமனையில்தான் அனுமதிக்கப்படுவேன்.
என்ன சாப்பிடுவது என்பதில் நான் உஷாராக இருப்பேன். அதுதான் எனக்கு மிகமுக்கியம். இயற்கையான சர்க்கரை கொண்ட க்ளூடன் இல்லாத டெசர்ட்டுகளை எடுத்துக்கொள்வேன். மற்றபடி உணவுகள் மீதான தீவிர நாட்டம் இப்போது இல்லை என்று கூறியுள்ளார்.