மகளிர் கிரிக்கெட்டில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-ஆவது ஒருநாள் ஆட்டம் வதோதராவில் இன்று தொடங்கியுள்ளது. மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதல் ஆட்டத்தில் காயம் காரணமாக இடம்பெறாமல் இருந்த மிதாலி ராஜ், இந்த ஆட்டத்தில் கேப்டனாகச் செயல்படுகிறார்
ஆஸ்திரேலிய அணி மிகச்சிறப்பாக இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொண்டது. முன்வரிசை, நடுவரிசை வீராங்கனைகள் பொறுப்புடன் விளையாடியதால் அந்த அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை போல்டன் 84 ரன்கள் எடுத்து சதமெடுக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். எல்லி பெரி 70 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மூனி 40 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரைக் கடைசிக்கட்டங்களில் நன்கு உயர்த்தினார். இந்தியத் தரப்பில் ஷிகா பாண்டே 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.