குன்னூரில் தென் பிராந்திய ராணுவ வீரர்களுக்கான நெடுந்தூர ஓட்டப் பந்தயத்தில் வெலிங்டன் ராணுவ மைய வீரர் வெற்றி பெற்றார்.
குன்னூர் ராணுவ மையத்தின் சார்பில் ஆண்டுதோறும் தென் பிராந்திய ராணுவ வீரர்களுக்கான நெடுந்தூர ஓட்டப் பந்தயம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற 10 கிலோ மீட்டர் நெடுந்தூர ஓட்டப் பந்தயத்தில் தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட 9 மாநிலங்களைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.
குன்னூர் தங்கராஜ் விளையாட்டு மைதானத்தில் இருந்து தொடங்கப்பட்ட இந்த ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்ற ராணுவ வீரர்கள் பிளாக்பிரிட்ஜ், ராணுவ கல்லூரியைக் கடந்து சிங்காரத் தோப்பு வழியாக மீண்டும் விளையாட்டு மைதானத்தை வந்தடைந்தனர். இதில், வெலிங்டன் ராணுவ மையத்தைச் சேர்ந்த லட்சுமணன் முதலிடம் பெற்றார். பெங்களூரு பொறியியல் துறையைச் சேர்ந்த சீனி 2-ஆம் இடமும், வெலிங்டன் ராணுவ மையத்தின் லிங்கராஜ் 3-ஆம் இடமும் பெற்றனர். இப்போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை குன்னூர் வெலிங்டன் ராணுவ மைய வீரர்கள் வென்றனர். கடந்த 7 ஆண்டுகளாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை குன்னூர் வெலிங்டன் ராணுவ மையம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
வெற்றிபெற்றவர்களுக்கு எம்ஆர்சி ராணுவ மையத் தலைவர் பிரிகேடியர் எஸ்.கே.சாங்வான் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.