இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் விதர்பா அணி 226.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 800 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற விதர்பா பேட் செய்யத் தீர்மானித்தது. அந்த அணியில் அபாரமாக ஆடிய வாசிம் ஜாஃபர் முச்சத வாய்ப்பை இழந்தார். மொத்தம் 431 பந்துகளை சந்தித்த அவர், 34 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 286 ரன்கள் குவித்தார்.
அவருக்கு அடுத்தபடியாக கணேஷ் சதீஷ் 10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 120 ரன்கள் சேர்த்தார். முன்னதாக, தொடக்க வீரரும் கேப்டனுமான ஃபய்ஸ் ஃபாஸல் 89, சஞ்சய் ராமசாமி 53, அக்ஷய் வத்கர் 37 ரன்கள் எடுத்தனர். வான்கடேவும் பிரமாதமாக விளையாடி 221 பந்துகளில் 157 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் 6 சிக்ஸர்களும் 16 பவுண்டரிகளும் எடுத்தார்.
ரெஸ்ட் ஆஃப் இந்தியா தரப்பில் சித்தார்த் கெளல் 2, ரவிச்சந்திரன் அஸ்வின், ஷாபாஸ் நதீம், ஜெயந்த் யாதவ், விஹாரி, அகர்வால் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர்.