முகமது ஷமி தன்னை ஏமாற்றுவதாகவும், அவரால் தாம் குடும்ப வன்முறைக்கு ஆளாகியிருப்பதாகவும் ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், ஷமி-ஹசின் இடையே நிகழ்ந்ததாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் பதிவு வெளியானதாக கூறப்படுகிறது. அதில் இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிலதிபர் முகமது பாய் என்பவரிடம் இருந்து பாகிஸ்தானைச் சேர்ந்த அலிஷ்பா என்ற பெண் மூலமாக முகமது ஷமி பணம் பெற்றதாக ஜஹான் குற்றம்சாட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்திய கிரிக்கெட் பந்துவீச்சாளர் முகமது ஷமிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு குறித்து பிசிசிஐயின் ஊழல் தடுப்புப் பிரிவு (ஏசியு) விசாரணை நடத்த வினோத் ராய் தலைமையிலான பிசிசிஐ நிர்வாகக் குழு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தயவு செய்து தன்னை சந்திக்க அனுமதி வழங்குமாறு முகமது ஷமி மனைவி ஹாசின் ஜஹான் கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
நான் எனது இருகரம் கூப்பி முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். தயவு செய்து நீங்கள் என்னை சந்திக்க அனுமதி வழங்க வேண்டும். நான் உண்மைக்காக போராடுகிறேன். என் மீது எந்த தவறும் இன்றி என்னை கொடுமைப்படுத்தியுள்ளனர். இதில் எனக்கு தனிப்பட்ட முறையில் உங்களின் ஆதரவைக் கோரவில்லை. ஆனால் உண்மையின் பக்கம் உங்கள் பார்வைப்பட வேண்டும் என்றுதான் கோரிக்கை வைக்கிறேன்.
தயவு செய்து என்னை ஒருமுறை நேரில் சந்தித்து எனது தரப்பு வாதங்களைக் கேளுங்கள். பிறகு என்ன செய்வது என்பது குறித்து நீங்கள் முடிவு எடுங்கள். உங்களைச் சந்திப்பதன் மூலம் எனது தரப்பு நியாயங்களையும், வலிகளையும் உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன் இதில் வேறொன்றும் இல்லை. என்னுடைய இந்த ஒரு கோரிக்கையை மட்டும் தயவு செய்து நிறைவேற்றுங்கள் என்றார்.