அம்பேத்கருக்கு எதிராக ட்வீட் செய்ததாக கிரிக்கெட் வீரர் பாண்டியா மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக பாண்டியா விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த டிசம்பர் 26 அன்று, எந்த அம்பேத்கர், அரசியல் சாசனத்தை வகுத்தவரா? அல்லது இடஒதுக்கீடு என்கிற நோயைப் பரப்பியவரா என்று பிரபல கிரிக்கெட் வீரர் பாண்டியா கேள்வி எழுப்பியதாகவும் இந்த ட்வீட் தனது சமூகத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாகவும் மேக்வால் என்கிற வழக்கறிஞர், ஜோத்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து பாண்டியா மீது வழக்கு பதிவு செய்யுமாறு காவல்துறைக்கு எஸ்.சி/எஸ்.டி. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து கிரிக்கெட் வீரர் பாண்டியா விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: அம்பேத்கரை அவமானப்படுத்தும் விதத்தில், தான் ட்வீட் எதுவும் வெளியிடவில்லை. என்னுடைய பெயரில் உள்ள போலியான ட்விட்டர் கணக்கு வழியாக அப்படியொரு ட்வீட் வெளியாகியுள்ளது. எந்த ஒரு சமூகத்தையும் இழிவுபடுத்தும் விதத்தில் நான் ட்வீட் செய்வதில்லை. இதுகுறித்த என் விளக்கத்தை நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கவுள்ளேன் என்று கூறியுள்ளார்.