சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டுக்கான சம்மேளனத்தின் (ஐஎஸ்எஸ்எஃப்) ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் இளவேனில் வலரிவன், மகளிருக்கான 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவில் தங்கம் வென்றார். மேலும் தகுதிச்சுற்றின்போது 631.4 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனையும் படைத்தார்.
தனது 2-ஆவது உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்றுள்ள இளவேனில், இறுதிச்சுற்றில் 249.8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். அவரே, அணிகளுக்கான பிரிவில் ஷ்ரேயா அகர்வால், ஜீனா கிட்டா ஆகியோருடன் இணைந்து 2-ஆவது தங்கத்தையும் கைப்பற்றினார்.
இதனிடையே, ஆடவருக்கான 10 மீ ஏர் ரைஃபிள் பிரிவில் இந்தியாவின் அர்ஜுன் பபுதா வெண்கலப் பதக்கம் வென்றார். அதே பிரிவில் இதர இந்தியர்களான சூர்ய பிரதாப் சிங் மற்றும் சாஹு துஷார் மனே முறையே 6 மற்றும் 8-ஆவது இடங்களில் நிறைவு செய்தனர்.