பலாத்கார புகாருக்கு ஆளாகியிருக்கும் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் செளம்யஜித் கோஷ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியிலிருந்தும் அவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
18 வயது பெண் ஒருவர் பலாத்கார புகார் அளித்ததன் அடிப்படையில், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், செளம்யஜித் விவகாரம் குறித்து இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனத்தின் நிர்வாகக் குழு வெள்ளிக்கிழமை கூடி ஆலோசித்தது. அதன் முடிவில் சம்மேளனம் வெளியிட்ட அறிக்கையில், தீவிரமான குற்றச்சாட்டு காரணமாக செளம்யஜித் கோஷ் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சஸ்பெண்ட் காலகட்டத்தில் அவர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு போட்டிகளில் பங்கேற்க இயலாது. மேலும் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார்.
இவை தவிர, தன் மீதான பலாத்கார புகார் குறித்து செளம்யஜித் கோஷ் தன்னிலை விளக்கம் அளிக்கவும் கோரி இந்திய டேபிள் டென்னிஸ் சம்மேளனம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.