மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
உலகின் 107-ஆம் நிலை வீரரான பாம்ப்ரி, பிரதான சுற்றின் முதல் ஆட்டத்தில் உலகின் 75-ஆம் நிலையில் இருக்கும் போஸ்னிய வீரர் மிர்ஸா பேசிச்சை 7-5, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். ஒரு மணி 32 நிமிடங்களில் முடிவுக்கு வந்த இந்த ஆட்டத்தில், 13 பிரேக் பாய்ண்ட் வாய்ப்புகளில், யூகி 5-ஐ கைப்பற்ற, பேசிச் இரண்டை எட்டினார்.
இத்துடன் 2-ஆவது முறையாக பேசிச்சை சந்தித்த யூகி, கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் சந்திப்பில் சோஃபியா டென்னிஸ் போட்டியில் அவரிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
பாம்ப்ரி தனது 2-ஆவது சுற்றில் உலகின் 11-ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜேக் சாக்கை சந்திக்கிறார். போட்டித் தரவரிசையில் 8-ஆவது இடத்தில் இருக்கும் ஜேக் சாக்குடன், யூகி பாம்ப்ரி மோதுவது இது முதல் முறையாகும்.
பிரதான சுற்றில் முன்னேறி வருவதால் உலகத் தரவரிசையில் முதல் 100 இடங்களை நெருக்கும் வாய்ப்பு பாம்ப்ரிக்கு கிடைக்கும். அவ்வாறு அவர் 100 இடங்களுக்குள்ளாக வரும் பட்சத்தில், எதிர்வரும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிக்கு நேரடியாகத் தகுதிபெறுவார்.