ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் மானு பேக்கர் மகளிருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்றார்.
முன்னதாக, மெக்ஸிகோவில் சமீபத்தில் நிறைவடைந்த சீனியர் உலகக் கோப்பை போட்டியில் முதல் முறையாக பங்கேற்றிருந்த மானு பேக்கர், அதில் 2 தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய மானு பேக்கர், 235.9 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். தாய்லாந்தின் கன்யாகோர்ன் ஹிருன்போம் 234.9 புள்ளிகளுடன் வெள்ளியும், சீனாவின் கைமான் லூ 214.2 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனர்.
இதே பிரிவில் போட்டியிட்ட மற்றொரு இந்திய வீராங்கனையான தேவான்ஷி ராணா, 195.3 புள்ளிகளுடன் 4-ஆவதாக வந்தார்.
மகளிர் அணியினர் பிரிவிலும் மானு பேக்கர், தேவான்ஷி ராணா, மஹிமா அகர்வால் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கம் வென்றது. இப்பிரிவில் சீனா 2-ஆம் இடமும், தாய்லாந்து 3-ஆம் இடமும் பிடித்தன.
2 பதக்கங்கள்: இப்போட்டியின் ஆடவர் 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியா 2 பதக்கம் வென்றது. கெüரவ் ராணா 233.9 புள்ளிகளுடன் வெள்ளியும், அன்மோல் ஜெயின் 215.1 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனர். சீனாவின் ஜீஹாவ் வாங் 242.5 புள்ளிகளுடன் தங்கம் வென்றார்.
இப்பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியிருந்த இதர இந்தியர்களில் அர்ஜுன் சிங் சீமா (152.7), அன்ஹாத் ஜவான்டா (134.4), அபிஷேக் ஆர்யா (114.5) ஆகியோர் முறையே 6, 7, 8-ஆவது இடங்களைப் பிடித்தனர்.
ஆடவர் அணிகள் பிரிவிலும் இந்தியாவின் சீமா, ராணா, அன்மோல் அடங்கிய அணி தங்கமும், ஜவான்டா, ஆர்யா, ஆதர்ஷ் சிங் ஆகியோர் அடங்கிய அணி வெண்கலமும் வென்றன. சீன அணி வெள்ளியை தட்டிச் சென்றது. இதேபோல், டிராப் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா வெள்ளி வென்றது.
தற்போதைய நிலையில் இந்தியா 5 தங்கம் உள்பட 11 பதக்கங்களுடன், பட்டியலில் 2-ஆவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் சீனா 13 பதக்கங்களுடன் நீடிக்கிறது.