லண்டன்: தென் ஆப்பிரிக்காவுடனான போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது.
தென் ஆபிரிக்காவின் கேப்டவுனில் நடந்து வரும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் கேமரூன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார் என்ற சர்ச்சையில் சிக்கினார்.
பீல்டிங் செய்த போது அவர் தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த சிறிய மஞ்சள் நிற பொருளை எடுத்து தனது உள்ளாடைக்குள் போட்ட காட்சி வீடியோவில் தெளிவாக பதிவானது. அதை பயன்படுத்தி அவர் பந்தை சேதப்படுத்தி இருக்கலாம் என்று சந்தேகம் கிளம்பியது.
பின்னர் நடைபெற்ற விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானது. ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியதை ஒப்புக்கொண்டார். தனக்கு இது குறித்து முன்பே தெரியும் என்று ஸ்மித் கூறியதுஅனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அதன் தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஸ்டீவ் ஸ்மித் நீக்கப்பட்டார். தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான எஞ்சி உள்ள போட்டிகளில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக டிம் பெயின் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டு உள்ளது. அத்துடன் போட்டிக்கான ஊதியத்தில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு 100% மற்றும் பேன்க்ராஃப்ட்டுக்கு 75% பிடித்தம் செய்யவும் ஐசிசி உத்தரவிட்டுள்ளது.