சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து டேவிட் வார்னர் விலகல்! புதிய கேப்டன் யார்?

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் ஆஸ்திரேலிய அணியின் வீரர்...
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து டேவிட் வார்னர் விலகல்! புதிய கேப்டன் யார்?

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் ஆஸ்திரேலிய அணியின் வீரர் டேவிட் வார்னர் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் ஏப்ரல் 7-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. அதில் பங்கேற்கும் ராஜஸ்தான் அணியில் ஸ்மித்துக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில், சில தினங்களுக்கு முன், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பந்தின் தன்மையை மாற்றுவதற்கு ஆஸ்திரேலிய அணியின் பேன்கிராஃப்ட் முயன்றது விடியோவில் பதிவாகியிருந்தது. இந்தச் செயலுக்கு கேப்டன் ஸ்மித்தும் உடந்தையாக இருந்ததை ஒப்புக் கொண்டார். அத்துடன், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து அவர் விலகினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக அவர் அறிவித்தார். இதையடுத்து, அந்த அணியின் கேப்டன் பொறுப்பு இந்திய வீரர் அஜிங்க்ய ரஹானேவுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் வார்னரின் நிலை குறித்த கேள்வி எழுந்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டிருந்தார். 

இச்சம்பவத்தில் தொடர்புடைய ஸ்மித், வார்னர், பேன்கிராப்ட் ஆகிய மூவரும் உடனடியாகத் தென் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி தாயகம் திரும்பவேண்டும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை அதிகாரி ஜேம்ஸ் சுதர்லேண்ட் நேற்று அறிவித்தார். அடுத்த 24 மணி நேரத்தில் அவர்கள் மீதான நடவடிக்கை குறித்து அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் ஆஸ்திரேலிய அணியின் வீரர் டேவிட் வார்னர் விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார். இத்தகவலை அந்த அணியின் தலைமைச் செயல் அதிகாரி சண்முகம் தெரிவித்துள்ளார். புதிய கேப்டன் விரைவில் அறிவிக்கப்படுவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நியூஸிலாந்து கேன் வில்லியம்சன், இந்தியாவின் ஷிகர் தவன் ஆகிய இருவரில் ஒருவர் கேப்டனாக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷிகர் தவன் தேர்வு செய்யப்பட்டால் இந்த ஐபிஎல் போட்டியில் அனைத்து அணிகளின் கேப்டன்களாக இந்தியர்களே இருப்பார்கள். எனினும் கேன் வில்லியம்சனுக்கே அதிக வாய்ப்புள்ளதாக அறியப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com