புணே: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அம்பட்டி ராயுடுவின் அதிரடி சதத்தில் வெற்றி பெற்று, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 'ப்ளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 46-வது ஆட்டம் புனேயில் ஞாயிறன்று நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி பந்து வீச்சினை தேர்வு செய்தார்.
முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஷிகர் தவான் (79), கேன் வில்லியம்சன் (51) ஆகிய இருவரின் அட்டகாசமான ஆட்டத்தினால் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வாட்சன், அம்பட்டி ராயுடு ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்கோர் 13.3 ஓவரில் 134 ரன்னாக இருக்கும்போது 35 பந்தில் 5 பவுண்டரி, 3 சிக்சருடன் 57 ரன்கள் சேர்த்த நிலையில் வாட்சன் ரன்அவுட் ஆனார். அடுத்து வந்த ரெய்னா 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். 3-வது விக்கெட்டுக்கு அம்பதி ராயுடு உடன் தோனி ஜோடி சேர்ந்தார்.
இருந்த போதிலும் அம்பட்டி ராயுடு அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். இதனால் அவர் 90 ரன்னைத் தாண்டினார்.
18-வது ஓவரின் 5-வது பந்தில் ஒரு ரன் எடுத்து ஐபிஎல் தொடரில் அவர் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார். அடுத்த பந்தில் தோனி ஒரு ரன் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் 19 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
62 பந்தில் 7 பவுண்டரி, 7 சிக்சருடன் அம்பட்டி ராயுடு 100 ரன்களுடனும், டோனி 20 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் இதுவரை விளையாடிய 12 ஆட்டங்களில் 8-ல் வெற்றி பெற்ற சென்னை அணி 'ப்ளேஆப்' சுற்றுக்கு தகுதி பெற்றது.