சவ்வு விலகல் பிரச்னை காரணமாக கவுண்டி கிரிக்கெட்டில் கோலி விளையாடுவது சந்தேகம்!

கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி இங்கிலாந்து தொடருக்குச் சிறப்பாகத் தயாராகவேண்டும் என்கிற கோலியின் திட்டத்தில் அடி விழுந்துள்ளது...
சவ்வு விலகல் பிரச்னை காரணமாக கவுண்டி கிரிக்கெட்டில் கோலி விளையாடுவது சந்தேகம்!

டெஸ்ட் விளையாடக் கூடிய அந்தஸ்து பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் தனது வரலாற்றுச் சிறப்பு மிக்க முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுக்கு எதிராக அடுத்த மாதம் விளையாடுகிறது. இங்கிலாந்தில் உள்ள கவுண்டி அணியான சர்ரேவில் ஜூன் மாதம் முழுவதும் விளையாட இந்திய கேப்டன் விராட் கோலி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை. இந்திய அணி அடுத்தச் சில மாதங்களில் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள், டி 20 போட்டிகளில் பங்கேற்கிறது. இங்கிலாந்தில் நிலவும் ஆட்ட சூழல்நிலை குறித்து அறிவதற்காக கோலி, சர்ரே அணியில் விளையாடுகிறார். 

இந்நிலையில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி இங்கிலாந்து தொடருக்குச் சிறப்பாகத் தயாராகவேண்டும் என்கிற கோலியின் திட்டத்தில் அடி விழுந்துள்ளது. கோலிக்குத் தண்டுவட நரம்பில் (spinal nerve) காயம் ஏற்பட்டதையடுத்து அவர் மும்பையில் உள்ள மருத்துவர்களிடம் கலந்தாலோசித்தார். கோலிக்கு ஏற்பட்டுள்ள சவ்வு விலகல் (Herniated disk) பிரச்னை காரணமாக அவர் ஓய்வெடுக்க வேண்டும், அதற்குப் பதிலாக கவுண்டி கிரிக்கெட் விளையாட இங்கிலாந்துக்குச் சென்றால் காயம் மேலும் தீவிரமாகி, இங்கிலாந்து தொடரிலிருந்து விலக நேரிடும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். எனினும் இதனால் கோலி அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதில்லை என்றும் கூறியுள்ளார்கள். இதனால் கவுண்டி கிரிக்கெட்டில் கோலி விளையாடுவது தற்போதைக்குச் சந்தேகமாகியுள்ளது. இத்தகவல் ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளியாகியுள்ளது.   

கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகுவது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை கோலி விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com