ஜப்பான் ஜிபு நகரில் நடக்கவுள்ள 18-வது ஆசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 21 வீராங்கனைகளுடன் 51 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது.
வரும் ஜூன் 7 முதல் 10-ஆம் தேதி வரை தடகள சாம்பியன் போட்டிகள் நடக்கின்றன. இதில் நீண்ட ஓட்டப்பந்தய வீராங்கனை ஜிஸ்னா மேத்யூ, மும்முறை தாண்டுதல் வீரர் கமல்ராஜ் கனகராஜ், குண்டு எறிதல் ஆஷிஷ் பலோதியா, ஹாமர் எறிதலில் ஆசிஷ் ஜாக்கர் உள்பட 21 வீராங்கனைகள், 30வீரர்கள் கொண்ட 51 பேர் அணி கலந்து கொள்கிறது.
கேரள தடகள வீரர் சங்கர் காயம் காரணமாக பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது. வியட்நாமில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த போட்டியில் 7 தங்கத்துடன் 17 பதக்கம் வென்று இந்தியா 3-வது இடத்தைப் பெற்றது.
ஜிபுவில் நடைபெறும் போட்டிகளில் இளம் வீரர்கள் அதிகளவில் உள்ளதால் கூடுதல் பதக்கம் பெற முடியும் என்றார் ஏஎஃப்ஐ செயலாளர் சி.கே.வல்சன். ஜிஸ்னா, கமல்ராஜ் கனகராஜ் ஆகியோர் தவறாமல் பதக்கம் வெல்வர் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.