உடல்தகுதி குறித்து இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, சமூகவலைதளத்தில் விடுத்த சவாலை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.
மத்திய அமைச்சரும், ஒலிம்பிக் வெள்ளிப் பதக்க வீரருமான ரத்தோர் இந்தியர்கள் உடல்தகுதியுடன் திகழ வேண்டும் என்பதற்காக புதன்கிழமை சமூகவலை தளத்தில் பிரசாரத்தை தொடங்கி தங்கள் உடல்தகுதி ரகசியத்தை பதிவேற்றம் செய்யுமாறு கேட்டிருந்தார். ரத்தோரின் வேண்டுகோளின்படி கேப்டன் கோலி தனது உடல்தகுதி குறித்த விடியோ காட்சியை பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் கேப்டன் விராட் கோலி, தனது கட்டுரை (டிவிட்டர்) பக்கத்தில் பிரதமர் மோடி, தோனி, மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் தங்கள் உடல்தகுதி தொடர்பாக பதிவிட வேண்டும் என சவால் விடுத்திருந்தார்.
இதற்கிடையே கோலியின் சவாலை ஏற்பதாக பிரதமர் மோடி தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார். தீவிர யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி மேற்கொண்டு வரும் மோடி, அதிகாலை முதல் இரவு வரை சுறுசுறுப்பாக உள்ளேன். இதன் ரகசியம் யோகா, மூச்சுப் பயிற்சியே ஆகும். சோர்வாக இருந்தால் உடனே ஆழ்ந்த மூச்சுப் பயிற்சியை மேற்கொள்வேன். எனது உடல்தகுதியின் நிலை தொடர்பான விடியோவை பதிவிடுவேன் எனத் தெரிவித்திருந்தார்.