இலங்கையில் நடைபெற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா போட்டிகளில் இலங்கை ஆடுகள பராமரிப்பாளர் சூதாட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல அல் ஜஸீரா செய்தி நிறுவனம், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இலங்கையின் காலே ஆடுகள பராமரிப்பாளர் தரங்க இண்டிகா, சூதாட்டத்தில் ஈடுபடுவது தொடர்பாக மும்பையைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ராபின் மோரிஸ் மற்றும் கொழும்புவைச் சேர்ந்த தரிண்டு மெண்டிஸ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துவதை அம்பலப்படுத்தியுள்ளது.
அதில், காலே மைதானத்தின் ஆடுகளத்தை சூதாட்டக்காரர்களுக்கு ஏற்ற மாதிரி மாற்றி அமைப்பது தொடர்பாக இவர்கள் பேசியுள்ளனர். காலே மைதானத்தில் 2016-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் 2017-ல் இந்திய அணிகள் பங்கேற்ற போட்டிகளின் போது ஆடுகளத்தை மாற்றியமைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளது இதில் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் வருகிற அக்டோபர் மாதம் இங்கிலாந்து அணியின் சுற்றுப்பயணத்தின் போதும் காலே ஆடுகளத்தை மாற்றியமைப்பது குறித்தும் ஆலோசித்துள்ளனர். இதுகுறித்து விசாரிப்பதாக சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐசிசி) தெரிவித்துள்ளது. இதனிடையே இங்கிலாந்து தொடர் நடைபெறுவது தற்போது கேள்விக்குரியாகியுள்ளது.
இந்நிலையில், அல் ஜஸீரா செய்தி நிறுவனம் இந்த ஆவணப்படத்தை ஞாயிற்றுக்கிழமை மாலை இணையதளத்தில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.