டி20 கிரிக்கெட் ஆட்டங்களை விடவும் டெஸ்ட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் ஸ்மித் கூறியுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஸ்மித் பேசியதாவது:
முதல் 6 மாதங்களுக்கு உள்ளூர் அளவில் டி20 கிரிக்கெட் போட்டிகள் விளையாடவேண்டும். மீதமுள்ள 6 மாதங்களில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படவேண்டும். சர்வதேச அளவில் டி20 ஆட்டங்கள் நடத்தப்படக்கூடாது. உள்ளூர் அளவில் டி20 போட்டிகள் நடத்தப்படவேண்டும். டெஸ்ட், ஒருநாள் ஆட்டங்கள் மட்டும் சர்வதேச அளவில் விளையாடப்பட வேண்டும். ஒவ்வொரு இரு வருடங்களுக்கும் உலகக் கோப்பைப் போட்டி நடத்தவேண்டும்.
டெஸ்ட் கிரிக்கெட்டைப் பிரபலப்படுத்த ஐசிசி செலவழிக்க வேண்டும். டி20யைப் பிரபலப்படுத்தவே அதிகப் பணம் செலவழிக்கப்படுகின்றன. விராட் கோலி போன்ற ஒரு வீரர் டெஸ்ட் போட்டியில் நன்கு விளையாடவேண்டும் என எண்ணுகிறார். இது பாராட்டப்படவேண்டியது என்று கூறியுள்ளார்.