டி20 போட்டிகளில் தோனி இடம்பெறாதது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இன்று (வியாழக்கிழமை) விளக்கம் அளித்தார்.
மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனான டி20 அணியில் தோனி சேர்க்கப்படவில்லை. தோனி, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் தான் விளையாடிக் கொண்டிருக்கிறார். இதனை மூத்த வீரருக்கு ஓய்வு என்றும் குறிப்பிடமுடியாது. அதனால், இந்த தோனி சேர்க்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, மாற்று விக்கெட் கீப்பர்களை தேர்ந்தெடுப்பதற்கான நோக்கத்திலேயே தோனிக்கு ஓய்வுளிக்கப்பட்டுள்ளதாக தேர்வுக் குழு விளக்கம் அளித்தது.
இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 5-ஆவது ஒருநாள் போட்டி முடிவடைந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
"இதுதொடர்பாக தேர்வுக் குழுவினர் ஏற்கனவே விளக்கம் அளித்திருக்கின்றனர். அதனால், நான் இங்கு விளக்கம் அளிக்கவேண்டியதில்லை. என்ன நடந்தது என்பதை தேர்வுக் குழுவினர் தெளிவாக விளக்கியுள்ளனர். இதுகுறித்தான ஆலோசனை நடைபெறும் போது நான் அங்கு இல்லை.
தோனி தற்போதும், இந்திய அணியின் ஓர் அங்கமே. அவர் டி20 போட்டிகளில் ரிஷப் பந்த் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க நினைக்கிறார். அதனால், அவர் ஒருநாள் போட்டிகளில் வழக்கம் போல் விளையாடுவார். இளம் வீரர்களுக்கு உதவவே அவர் முயல்கிறார்" என்றார்.