இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 5-வது ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய மே.இ. அணி 104 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.
டாஸ் வென்ற மே.இ. அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் மாற்றம் எதுவுமில்லை. மே.இ. அணியில் நர்ஸுக்குப் பதிலாக பிஷு சேர்க்கப்பட்டுள்ளார். ஹேம்ராஜுக்குப் பதிலாக ஒஷானே தாமஸ் இடம்பெற்றுள்ளார்.
மே.இ. அணி 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 30 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் தொடக்க வீரர் பவல் ரன் எதுவும் எடுக்காமல் புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மே.இ. அணியின் முக்கிய வீரரான ஹோப்பும் ரன் எதுவும் எடுக்காமல் பூம்ராவின் பந்துவீச்சில் போல்ட் ஆனார். முதல் 4 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே வீசி அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார் பூம்ரா.
மே.இ. அணியால் சரிவைத் தடுத்த நிறுத்த முடியாமல் போனது. இதனால் வரிசையாக விக்கெட்டுகள் விழுந்தன.
ஹோப்புக்கு அடுத்ததாக சாமுவேல்ஸ் 24 ரன்களிலும் ஹெட்மயர் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தார். அணியின் முக்கிய வீரர்கள் பெவிலியனுக்குத் திரும்பியதால் இந்திய வீரர்கள் மேலும் உற்சாகமானார்கள். அடுத்த 51 ரன்களுக்குள் மீதமுள்ள விக்கெட்டுகளும் வீழ்ந்தன. எல்லா இந்திய பந்துவீச்சாளர்களும் விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ஜடேஜா அசத்தலாகப் பந்துவீசி 9.5 ஓவர்களில் 33 ரன்கள் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். பூம்ரா, கலீல் அகமது தலா 2 விக்கெட்டுகளையும் புவனேஸ்வர், குல்தீப் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.
மிகவும் சிரமப்பட்டு பேட்டிங் செய்த மேற்கிந்தியத் தீவுகள் அணி, 31.5 ஓவர்களில் 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மே.இ. அணியில் அதிகபட்சமாக சாமுவேல்ஸ் 24, ஹோல்டர் 25 ரன்கள் எடுத்தார்கள். பிஷு 8 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.