சிகே. நாயுடு கோப்பை போட்டியின் ஆட்டம் ஒன்றில் உத்தரப்பிரதேச மாநில இடதுகை சுழற்பந்து வீச்சாளர் சிவா சிங் 360 டிகிரி சுற்றி வந்து வித்தியாசமான முறையில் பந்துவீசியது சமூகவலை தளத்தில் வைரலாகி உள்ளது.
மேற்கு வங்கத்துக்கும்-உத்தரப்பிரதேச அணிகள் இடையிலான ஆட்டம் கொல்கத்தாவில் அண்மையில் நடைபெற்றது. பந்துவீச்சாளர்கள் சில நேரங்களில் வித்தியாசமாக பந்துவீசுவது வழக்கம். பாக் வீரர் அப்துல் காதிர், இலங்கை வீரர் முத்தையா முரளிதரன், மலிங்கா ஆகியோர் பந்து வீசும் முறை பிரசித்தி பெற்றவை. இவற்றுக்கு முதலில் ஐசிசி அங்கீகாரம் தராத நிலையில் பின்னர் நடுவர்கள் குழு ஆய்வு செய்து அங்கீகாரம் அளித்தது.
இந்நிலையில் உத்தரப்பிரதேச வீரர் சிவா சிங், மேற்கு வங்கி அணிக்கு எதிராக பந்துவீசிய போது 360 டிகிரி சுற்றி வந்து வீசினார். ஆனால் நடுவர் அதை டெட் பால் என அறிவித்தார். இதையடுத்து சிவா சிங் அவரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதுதொடர்பாக சிவா சிங் கூறுகையில்:
நான் ஏற்கெனவே பல போட்டிகளில் 360 டிகிரி முறையில் சுற்று தான் பந்துவீசினேன். கேரளத்துடன் விஜய் ஹஸாரே கோப்பையிலும் அவ்வாறு தான் பந்துவீசினேன். தற்போது தான் முதல்முறையாக டெட்பால் என நடுவர் அறிவித்துவிட்டார். பேட்ஸ்மேன்கள் ரிவர்ஸ்ஸ்வீப் உள்பட புதிய முறைகளில் ரன் எடுக்கின்றனர். ஆனால் பெளலர்கள் புதிய முறையில் வீசினால் டெட்பாலாக அறிவிக்கப்படுகிறது என்றார்.
சிவா பந்துவீசும் முறைக்கு பிஷன்சிங் பேடி, இங்கிலாந்து வீரர் மைக்கேல் வாகன், ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.