காஷ்மீர் மாநிலம், பாகிஸ்தானுக்கும் வேண்டாம், இந்தியாவுக்கும் கொடுக்கவேண்டாம் என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிதி பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மாணவர்களுடன் உரையாடினார். அப்போது, "பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை. பாகிஸ்தானால் ஏற்கனவே உள்ள 4 மாகாணங்களை கையாளமுடியவில்லை" என்று பேசியதுபோல் விடியோ பதிவில் கேட்கிறது. இதுதொடர்பாக, அவர் மேலும் பேசுகையில்,
"பாகிஸ்தானுக்கு காஷ்மீர் தேவையில்லை. இந்தியாவுக்கும் கொடுக்கவேண்டாம். அது தனிநாடாக இருக்கட்டும். அங்கு உயிரிழக்கும் மக்கள் உயிரிழக்கக்கூடாது. மனிதநேயம் உயிருடன் இருக்கவேண்டும். அங்கு மக்கள் உயிரிழப்பதை பார்ப்பது வேதனையளிக்கிறது" என்றார்.
அப்ரிடியின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காஷ்மீர் விவகாரத்தில் அப்ரிடி ஏற்கனவே ஒருமுறை சர்ச்சை கருத்தை தெரிவித்திருக்கிறார். அவர் கடந்த ஏப்ரல் மாதம் தனது சுட்டுரை பக்கத்தில் பதிவிட்ட பதிவில்,
"இந்திய காஷ்மீர் பகுதியில் தற்போதைய நிலவரம் மிகவும் கவலை தருவதாக உள்ளது. அங்கு அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றன. காஷ்மீர் மக்களுக்கான சுய நிர்ணய உரிமை, சுதந்திரம் மறுக்கப்படுகிறது. ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் எங்கே போனது, இந்த ரத்தக்களறியை தடுக்க அந்த அமைப்புகள் ஏன் முயற்சிக்கவில்லை" என்று தெரிவித்திருந்தார்.