2019 உலகக் கோப்பைக்குத் தயாராக வேண்டிய நிலைமை இருப்பதால் ஐபிஎல் போட்டியின் பிற்பகுதியில் ஆஸி. வீரர்கள் இடம்பெறமாட்டார்கள் என கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
ஐபிஎல் போட்டி மார்ச் 29 முதல் மே 19 வரை நடைபெறும் என்று அறியப்படுகிறது. இந்நிலையில் இந்தப் போட்டியில் இடம்பெறும் ஆஸி. வீரர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா.
உலகக் கோப்பையில் இடம்பெறக் கூடிய வீரர்கள் ஆஸி. ஒருநாள் போட்டியான ஷெஃப்பீல்டு ஷீல்ட்-டில் கலந்துகொண்டு சரியான முறையில் பயிற்சி எடுக்கவேண்டும் என்றும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூறியுள்ளது. அந்தப் போட்டி ஏப்ரல் 1 அன்று முடிவடையவுள்ளது. மேலும், பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர், மார்ச் 15 முதல் 29 வரை நடக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆஸி ஒருநாள் அணியில் இடம்பெறும் வீரர்களும் அதுவரை ஐபிஎல் போட்டியில் பங்கேற்கமுடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏப்ரல் இறுதியில் ஆஸி. உலகக் கோப்பை அணி அறிவிக்கப்படும். இதையடுத்து மே மாதம் உலகக் கோப்பை வீரர்கள் பயிற்சியில் ஈடுபடவுள்ளார்கள். இதனால் ஏப்ரல் மாதத்தில் மட்டுமே முன்னணி ஆஸி. வீரர்களால் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க முடியும் என்கிற சூழல் உருவாகியுள்ளது. இந்தச் சூழலைக் கருத்தில் கொண்டு, மிட்செல் ஸ்டார்க்குடனான ஒப்பந்ததை ரத்து செய்துவிட்டது கொல்கத்தா அணி.
ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் ஆஸி. வீரர்கள் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் அனுமதியைப் பெறவேண்டும், அந்த வீரர்கள் உலகக் கோப்பை மற்றும் ஆஷஸ் தொடரில் பங்கேற்பதையும் உறுதி செய்யவேண்டும் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூறியுள்ளது. இதனால் ஆஸி. உலகக் கோப்பை அணியில் இடம்பெறக்கூடிய வீரர்கள் ஐபிஎல் போட்டியில் குறைந்த ஆட்டங்களில் மட்டுமே பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைப் போட்டி, மே 30 அன்று தொடங்கவுள்ளது.