இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளது. இந்திய டெஸ்ட் அணியில் முகமது ஷமி இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் பெங்கால் அணிக்காக அடுத்த வார ரஞ்சி ஆட்டத்தில் அவர் விளையாடவுள்ளார். இதுதொடர்பாக, ஷமிக்கு பிசிசிஐ புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
வரும் 20-ம் தேதி தொடங்கவுள்ள கேரளாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுவதாக இருந்தால் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சமாக 15 ஓவர்கள் மட்டுமே வீசவேண்டும், தேவைப்பட்டால் கூடுதலாகச் சில ஓவர்கள் வீசிக்கொள்ளலாம் என ஷமிக்கு அறிவுறுத்தியுள்ளது பிசிசிஐ. ஆட்டத்தில் ஷமியின் பங்களிப்பு குறித்த விவரங்களைத் தினமும் அனுப்பவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. ரஞ்சி ஆட்டத்தால் ஷமியின் உடற்தகுதிக்குச் சிக்கல் எதுவும் நேரக்கூடாது என்பதால் இதுபோன்ற கட்டுப்பாடுகளை ஷமிக்கு விதித்துள்ளது பிசிசிஐ. இந்தக் கட்டுப்பாடுகளை பெங்கால் அணியும் ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர், டிசம்பர் 6 முதல் தொடங்கவுள்ளது.