ஷிகர் தவனின் அதிரடி ஆட்டம் வீண்: பரபரப்பான டி20 ஆட்டத்தில் இந்தியா தோல்வி!

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது.
ஷிகர் தவனின் அதிரடி ஆட்டம் வீண்: பரபரப்பான டி20 ஆட்டத்தில் இந்தியா தோல்வி!

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது.

பிரிஸ்பேனில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் சாஹலுக்குப் பதிலாக கிருனால் பாண்டியா இடம்பெற்றார். 

முதல் 3 ஓவர்கள் வரை ஆஸ்திரேலிய அணி, 12 ஓவர்கள்தான் எடுத்தது. அதன்பிறகு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் பவர்பிளே உள்ள முதல் 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 38 ரன்கள் எடுத்தது. ஷார்ட் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். 

கலீல் அஹமது வீசிய 8-வது ஓவரில் மூன்று சிக்ஸர்களை அடித்தார் லின். அந்த ஓவரில் ஆஸி. அணிக்கு 21 ரன்கள் கிடைத்தன. அடுத்த ஓவரில் ஃபிஞ்சை 27 ரன்களில் வெளியேற்றினார் குல்தீப் யாதவ். 

1 பவுண்டரி 4 சிக்ஸருடன் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக விளங்கிய லின்னையும் தனது அடுத்த ஓவரில் 37 ரன்களில் வெளியேற்றினார் குல்தீப். 10.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்து நல்ல நிலைமையில் இருந்தது ஆஸ்திரேலிய அணி.

இதன்பிறகு ஜோடி சேர்ந்த மேக்ஸ்வெல்லும் ஸ்டாய்னிஸும் இந்தியப் பந்துவீச்சில் பலவீனமான பந்துவீச்சாளர்களான கிருனாலையும் கலீல் அகமதுவையும் நன்குப் பயன்படுத்திக்கொண்டார்கள். கிருனால் வீசிய 14-வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்தார் மேக்ஸ்வெல். இதன்பிறகு கிருனாலின் கடைசி ஓவரில் மேலும் இரு சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. 

16.1 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் என்கிற வலுவான நிலையில் இருந்தபோது மழையால் ஆட்டம் தடைபட்டது. அப்போது மேக்ஸ்வெல் 46, ஸ்டாய்னிஸ் 31 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். இருவரும் கடைசி 5 ஓவர்களில் 68 ரன்கள் எடுத்து ஆட்டத்தை ஆஸி. அணிக்குச் சாதகமாக மாற்றினார்கள்.

இதன்பிறகு 17 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு ஆட்டம் தொடங்கியது. கடைசியில், ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. 17-வது ஓவரை வீசிய பூம்ரா, 6 ரன்கள் மட்டும் கொடுத்து மேக்ஸ்வெல்லின் விக்கெட்டை வீழ்த்தினார்.

ஆஸி. அணியில் அதிகபட்சமாக மேக்ஸ்வெல் 46 ரன்கள் எடுத்தார். இந்தியப் பந்துவீச்சாளர்களில் கலீல் அகமது 3 ஓவர்களில் 42 ரன்களும் கிருனால் பாண்டியா 4 ஓவர்களில் 55 ரன்களும் கொடுத்து இந்திய அணிக்குச் சிக்கலை ஏற்படுத்தினார்கள். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

டிஎல்எஸ் முறைப்படி இந்திய அணிக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய அணியில் ஷிகர் தவன் ஆரம்பம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் ரோஹித் சர்மா 7 ரன்களில் வெளியேறினார். இதன்பிறகும் ஷிகர் தவன் மட்டுமே அதிரடி ஆட்டத்தின் மூலம் தொடர்ந்து ரன்கள் குவித்தார். 28 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். பெஹ்ரன்டார்ஃப்-பின் 4-வது ஓவரில் ஒரு சிக்ஸும் இரண்டு பவுண்டரிகளும் அடித்தார் தவன். ரோஹித் போல இன்று ராகுலும் சிறப்பாக விளையாடவில்லை. அவர் 13 ரன்களில் ஸம்பா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கேப்டன் கோலி 8 பந்துகளில் 4 ரன்களில் மட்டும் எடுத்து அவரும் ஸம்பா பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்தச் சில பந்துகளில் தவனும் 42 பந்துகளில் 2 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி வெற்றி பெற தினேஷ் கார்த்திக்கும் ரிஷப் பந்தும் பங்களிக்கவேண்டிய நிலைமை உருவானது. 

தினேஷ் கார்த்திக்கும் ரிஷப் பந்தும் எதிர்பாராதவிதமாக 3.3 ஓவர்களில் 50 ரன்கள் கூட்டணி அமைத்தார்கள். டை வீசிய 14-வது ஓவரில் இருவரும் இணைந்து 25 ரன்கள் குவித்தார்கள். இதனால் ஆட்டம் பரபரப்பான கட்டத்தை அடைந்தது. எனினும் முக்கியமான கட்டத்தில் 20 ரன்களில் ஆட்டமிழந்தார் பந்த். இதனால் கடைசி ஓவரில் இந்திய அணி வெற்றி பெற 13 ரன்கள் தேவைப்பட்டது. 

ஆனால், இந்திய அணியால் அந்த ஓவரில் 8 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது. கிருனால் பாண்டியாவும் தினேஷ் கார்த்திக்கும் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழந்தார்கள். தினேஷ் கார்த்திக் 30 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 17 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் முதல் டி20 ஆட்டத்தை நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலிய அணி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com