இந்தியா, மேற்கிந்தியதீவுகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. இதன் முதல் போட்டி அக்டோபர் 4-ஆம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது. இத்தொடருக்கான இந்திய அணியில் இளம் வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
இதையடுத்து முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் 12 பேர் கொண்ட இந்திய அணி புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. அதில் இளம் வீரர் பிருத்வி ஷாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் ராகுல், பிருத்வி ஷா, புஜாரா, ரஹானே, ரிஷப் பண்ட், அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷமி, உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்குர் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த தொடர் குறித்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது:
ஹனுமா விஹாரி, பிருத்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் போன்ற இளம் வீரர்கள், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதால் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் இந்த தொடரை சிறந்த வாய்ப்பாக கருதி சிறப்பாக செயல்பட வேண்டும். முதல் தொடர் என்பதால் எவ்வித அழுத்தத்துக்கும் உட்படக்கூடாது. இந்திய அணியில் இடம்பிடித்து மிக நீண்ட காலம் விளையாட இது ஒரு அரிய வாய்ப்பாகும்.
இந்த தொடரை ஒரு மைல்கல்லை ஏற்படுத்தும் நல்ல வாய்ப்பாகவே நாங்கள் கருதுகிறோம். சில இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள நிலையில், அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த இது சிறந்த வாய்ப்பாக அமையும். ஏனென்றால் இது அவர்களுக்குதான் நல்ல வாய்ப்பாக அமையும் என்று நான் கருதுகிறேன் என்று பேசினார்.