இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜூனா ரனதுங்கா மீது இந்தியாவைச் சேர்ந்த விமானப் பணிப் பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
1996-இல் உலகக்கோப்பை வென்ற இலங்கை அணியின் கேப்டன் அர்ஜுனா ரனதுங்கா. இவர், 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5105 ரன்களும், 269 ஒருநாள் போட்டிகளில் 7456 ரன்களும் குவித்திருக்கிறார். இலங்கையில் மிகவும் போற்றக்கூடிய கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான இவர் தற்போது அந்நாட்டின் பெட்ரோலியத் துறை அமைச்சராக இருக்கிறார்.
இவர், இந்தியாவுக்கு வந்திருந்த போது தன் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக விமானப் பணிப் பெண் ஒருவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவர், அந்தப் பதிவில் அர்ஜூனா ரனதுங்கா மட்டுமில்லாது பாலியல் ரீதியில் சீண்டிய பல நபர்களை குறிப்பிட்டுள்ளார்.
அவர், அர்ஜூனா ரனதுங்கா குறித்து பதிவிட்டுள்ள பதிவின் சுருக்கம்,
"அர்ஜூனா ரனதுங்கா என் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அப்போது, நான் அவரது காலில் உதைத்து அச்சத்தில் கத்தினேன். இந்தியரிடம் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் தவறாக நடந்துக்கொள்வதால், போலீஸாரிடம் தெரிவிப்பது, பாஸ்போர்ட் ரத்து செய்யப்படுவது என கடுமையான விளைவுகள் குறித்து அவரை மிரட்டினேன். இதையடுத்து, உடனடியாக விடுதி வரவேற்பு அறைக்கு சென்று இதுதொடர்பாக தெரிவித்தேன். அவர்கள், இது உங்களது தனிப்பட்ட விஷயம், எங்களால் உதவி செய்ய முடியாது என்று தெரிவித்தனர்" என்று பதிவிட்டிருக்கிறார்.
பாலிவுட்டில் தொடங்கி தற்போது இந்தியாவின் அனைத்து துறைகளிலும் பரவி வரும் 'மீ டூ' பிரசாரத்தின் நீட்சியாக அர்ஜூனா ரனதுங்கா மீதான இந்தக் குற்றச்சாட்டும் வெளிவந்துள்ளது.