இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா மீது இந்தியப் பெண் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
'மீ டூ' மூவ்மெண்ட் இந்தியா முழுவதும் தற்போது வெளிப்படையாக பகிரப்பட்டு வருகிறது. இதன் மூலம், சினிமா, இதழியல், கிரிக்கெட் என பல பிரபலங்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் வெளிவர தொடங்கியுள்ளது. பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீதான வெளிப்படையான குற்றச்சாட்டை முன்வைத்தார். இது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில், தனது தோழி பகிர்ந்த ஒரு கருத்தை சின்மயி தனது சுட்டுரை பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில்,
"நான் எனது பெயரை வெளியிடாமலே இருக்க விரும்புகிறேன். சில வருடங்களுக்கு முன்பு, மும்பையில் நாங்கள் தங்கியிருந்த ஒரு விடுதியில் எனது தோழியை தேடிக்கொண்டிருந்தேன். உன் தோழி எனது அறையில் தான் இருக்கிறார் என்று தெரிவித்து ஒரு இலங்கை வீரர் என்னை வரவழைத்தார்.
நான் உள்ளே சென்றேன், ஆனால், எனது தோழி இல்லை. இதையடுத்து, அவர் என்னை படுக்கையில் தள்ளி பாலியல் ரீதியில் என்னை சீண்டினார். அந்த நேரத்தில் விடுதி ஊழியர் கதவை தட்டினார். அதை திறப்பதற்காக அவர் சென்றார். உடனடியாக நான் கழிவறைக்குச் சென்று எனது முகத்தை கழுவி விடுதி ஊழியர் வெளியேறியவுடன் நானும் அந்த இடத்தை விட்டு வெளியேறினேன். நான் அவமானத்துக்குள்ளானேன்.
அவர் பிரபலமானவர் என்பதை தெரிந்து தான் நீ அவரது அறைக்கு விருப்பத்துடன் சென்றாய், அதனால் உனக்கு இது தேவை தான் என்று பல பேர் சொல்வார்கள் என்று எனக்கு தெரியும்" என்றார்.
இந்தப் பதிவில் அவர் இலங்கை வீரர் என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தார். சின்மயி இதனை பதிவிடும் போது லசித் மலிங்கா என்று பெயரை குறிப்பிட்டார்.
ஏற்கனவே, இலங்கை முன்னாள் கேப்டன் அர்ஜூனா ரனதுங்கா மீது இந்திய விமானப் பணிப் பெண் ஒருவர் புதன்கிழமை குற்றம்சாட்டியிருந்தார்.