21 ஆண்டுகள் கழித்து சீனா-இந்தியா இடையே நட்பு கால்பந்து போட்டி சனிக்கிழமை சீனாவின் சுஷூ நகரில் நடைபெறுகிறது.
ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கு இந்திய அணி 8 ஆண்டுகள் கழித்து தகுதி பெற்றுள்ளது. இப்போட்டி வரும் 2019 ஜனவரி மாதம் ஐக்கிய அரபு நாடுகளில் நடக்கிறது. இதற்கு தயாராகும் வகையில் இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏஐஎஃப்எஃப்) பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்திய அணி பல்வேறு அயல்நாடுகளுக்கு சென்று பயிற்சி ஆட்டங்களில் ஆடி வருகிறது. ஆஸ்திரேலியா, மலேசியா, அரபு நாடுகளில் சென்று பயிற்சி பெற்ற நிலையில் தற்போது பலம் வாய்ந்த சீனாவுடன் நட்பு ஆட்டத்தில் மோதுகிறது. பிஃபா தரவரிசையில் சீனா 76, இந்தியா 97 இடங்களில் உள்ளன.
கடந்த 17 முறை மோதியதில் ஒரு முறை கூட இந்தியா வென்றதில்லை. நட்பு ஆட்டம் ஷாங்காய் அருகே சுஷு நகரில் நடக்கிறது. 21 ஆண்டுகள் கழித்து இரு நாடுகளின் சீனியர் அணிகள் மோதுவது குறிப்பிடத்தக்கது.
அணியின் பயிற்சியாளர் கான்ஸ்டான்டைன் கூறியதாவது-
இதை வெறும் நட்பு ஆட்டமாக வீரர்கள் கருதக்கூடாது. 140 கோடி மக்களின் பிரதிநிதியாக நாம் விளையாடுகிறோம் என ஆட வேண்டும். இந்த போட்டி எவ்வளவு முக்கியம் என்பதை நாம் உணர வேண்டும் என்றார்.
கடந்த 2015-இல் தேசிய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கான்ஸ்டான்டைன் பொறுப்பேற்ற போது தரவரிசையில் 166-ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 97-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற ஆட்டத்தில் மாலத்தீவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வி அடைந்திருந்தது குறிப்பிடத்கக்து.