இலங்கையுடனான 2-ஆவது ஒருநாள் போட்டி: டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இங்கிலாந்து வெற்றி

இலங்கையுடனான 2-ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
புகைப்படம்: டிவிட்டர்/ஐசிசி
புகைப்படம்: டிவிட்டர்/ஐசிசி

இலங்கையுடனான 2-ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 ஒருநாள், 1 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இருஅணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. 

இதையடுத்து, 2-ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 278 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் மார்கன் 92 ரன்களும், ரூட் 71 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

இலங்கை அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய மலிங்கா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து, 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. ஆனால், இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை அணி திணறியது. இதனால், அந்த அணி 74 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 

தனஞ்ஜெயா டி சில்வா மற்றும் திசாரா பெரேரா ஆகியோர் அந்த அணியை சரிவில் ஈட்டு மீட்டனர். அந்த அணி 29 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது, மழை குறுக்கிட்டதால் போட்டி தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 

அதன்பிறகு, மழை தொடர்ந்து பெய்து வந்ததால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர். 92 ரன்கள் குவித்த மார்கன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

இருஅணிகளுக்கிடையிலான 3-ஆவது ஒருநாள் போட்டி வரும் 17-ஆம் தேதி நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com