திருச்சியில் 45ஆவது அண்ணா நினைவு மாநில செஸ் போட்டி சனிக்கிழமை தொடங்கியது.
திருச்சி மேலரண் சாலையில் அமைந்துள்ள தி சிட்டி கிளப் சார்பில் நடந்த போட்டிகளை சங்கத் துணைத் தலைவர் மலர் செழியன் தொடக்கி வைத்தார்.
போட்டியானது இரு நிலைகளில் நடைபெறுகிறது. பொதுப்பிரிவில் தமிழ்நாடு செஸ் விளையாட்டு வீரர்கள் மட்டும் பங்கேற்கின்றனர். இதில் வயது வரம்பின்றி தமிழகம் முழுவதும் இருந்து சிறார், மகளிர், முதியோர் என 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
குழந்தைகள் பிரிவில் திருச்சி மாவட்ட செஸ் விளையாட்டு வீரர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் 7 வயதுக்குள்பட்டோர், 9 வயதுக்குள்பட்டோர் 13 வயதுக்குள்பட்டோர் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
பொதுப்பிரிவு, உள்ளூர் பிரிவு, மகளிர், முதியோர் என 4 நிலைகளில் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. பொதுப்பிரிவில் 8 ரொக்கப் பரிசுகளும், இதர 3 பிரிவுகளிலும் தலா 3 ரொக்கப் பரிசுகளும் வழங்கப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமை போட்டி நிறைவுறுகிறது.