இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சனத் ஜெயசூர்யா மீது இரண்டு பிரிவுகளின் கீழ் ஐசிசி ஊழல் தடுப்பு விசாரணைக் குழு குற்றம் சுமத்தியுள்ளது. ஆடுகளங்களை மாற்றி அமைத்தது தொடர்பான ஊழல் புகார் விசாரணைக்கு ஜெயசூர்யா உரிய ஒத்துழைப்பு தரவில்லை என அவர் மீது புகார் கூறப்பட்டுள்ளது. மேலும் இதற்கு 2 வாரங்களில் அவர் பதில் அளிக்க வேண்டும் எனவும் அவகாசம் தரப்பட்டுள்ளது.
தன் மீதான குற்றச்சாட்டு குறித்து ஜெயசூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
விளையாட்டு தொடர்பான விஷயங்களில் வெளிப்படையாகவும் உண்மையாகவும் நடந்துகொண்டுள்ளேன். என் மீதான புகாரில் மேட்ச் ஃபிக்ஸிங்கோ ஆடுகள மாற்றம் தொடர்பான குற்றச்சாட்டோ ஊழல் புகாரோ இல்லை. ஊழல் தடுப்புப் பிரிவினருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றுதான் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. என் மீதான புகார் குறித்து நான் பேசக்கூடாது. அப்படிப் பேசினால் ஐசிசி விதிமுறைகளை மீறிய குற்றத்துக்கு ஆளாக நேரிடும் என்று விளக்கம் அளித்துள்ளார்.