கவுகாத்தி: இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், ஹெட்மயர் சதம் காரணமாக இந்தியாவுக்கு 323 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
தற்போது இரு அணிகள் மோதும் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் துவங்கியுள்ளது. முதல் போட்டி கவுகாத்தியில் இன்று பிற்பகல் 1.30 மணியளவில் துவங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்த் வீச்சைத் தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஹெட்மயர் 106 ரன்னும், கேப்டன் ஹோல்டர் 38 ரன்னும் எடுத்தனர். இந்தியத் தரப்பில் சகால் 3, ஷமி , ஜடேஜா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
323 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட இந்திய அணியின் சேசிங்கில் ரோஹித் சர்மா சதம் அடித்துள்ளார். இந்தியா தொடர்ந்து விளையாடி வருகிறது.