விஜய் ஹஸாரே கிரிக்கெட் கோப்பை போட்டியில் மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தில்லியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
இப்போட்டியின் இறுதி ஆட்டம் பெங்களூருவில் சனிக்கிழமை நடைபெற்றது. முதலில் ஆடிய தில்லி அணி 45.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ஹிம்மத் சிங் 41, துருவ் ஷோரே 31, பவன் நேகி 21, சுபோத் பதி 25 ஆகியோர் ஒரளவு ரன்களை சேர்த்தனர்.
மும்பை தரப்பில் தவல் குல்கர்னி 3-30, துஷார் 2-30, சிவம் துபே 3-29 விக்கெட்டை வீழ்த்தினர்.
மும்பை அபார வெற்றி: பின்னர் ஆடிய மும்பை அணி 35 ஓவர்களில் 6 விக்கெட்டை மட்டுமே இழந்து 180 ரன்களை எடுத்து வென்றது. அந்த அணி வீரர்கள் ஆதித்ய டரே 71, சித்தேஷ் லேட் 48, சிவம் துபே 19 ரன்களை விளாசி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். தில்லி தரப்பில் நவ்தீப் சைனி 3-53 விக்கெட்டை வீழ்த்தினார்.
13 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 89 பந்துகளில் 71 ரன்களை எடுத்த ஆதித்ய டரே ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
மும்பை அணி இறுதியாக கடந்த 2006-07-இல் தான் விஜய் ஹஸாரே கோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.