ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முத்திரை பதித்த தமிழர்களுக்கு ஊக்கத் தொகைகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இன்று வழங்கினார்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் இறுதியில் தொடங்கி செப்டம்பர் முதல் வாரம் வரை நடைபெற்றது. இதில் தமிழகத்தின் சார்பில் ஸ்குவாஷ், மேஜைப்பந்து, ஓட்டப் போட்டி, ஹாக்கி என பல்வேறு பிரிவுகளில் வீரர்கள் பதக்கங்களை குவித்துள்ளனர்.
சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகை அளிக்கப்படும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி, வெள்ளி வென்றால் ரூ.30 லட்சம், வெண்கலம் வெல்வோருக்கு ரூ.20 லட்சம் உயரிய ஊக்கத் தொகை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்று உயரிய ஊக்கத் தொகை: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்ற தமிழக வீரர்களுக்கான உயரிய ஊக்கத் தொகைகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இன்று வழங்கியுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 5 கோடியே 20 லட்சம் மற்றும் அவ்வீரர்களின் 16 பயிற்றுநர்களுக்கு ரூ. 78 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 12 வீரர்களுக்கு ரூ. 3 கோடியே 70 லட்சம் ஊக்கத்தொகையும் 11 பயிற்றுநர்களுக்கு ரூ. 51 லட்சமும் என மொத்தம் 4 கோடியே 21 லட்சத்துக்கான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன. அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.