ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் ஜடேஜாவின் சுழல் ஜாலத்தில் சிக்கிய வங்கதேச அணி 173 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட்டின் 'சூப்பர் - 4' சுற்று போட்டிகள் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. இன்றைய போட்டியில் இந்தியா - வங்கதேசம், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதுகின்றன.
இந்தியா, வங்கதேசம் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் பாண்டியாவுக்கு பதிலாக நீண்ட நாட்களுக்குப் பிறகு ஜடேஜா விளையாடும் லெவனில் இடம்பெற்றார்.
அதன்படி, முதலில் வங்கதேச அணி பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களை புவனேஷ்வர் குமாரும், பும்ராவும் வீழ்த்தினர். இதனால், அந்த அணி 16 ரன்களுக்குள் தொடக்க ஆட்டக்காரர்களை இழந்து நெருக்கடிக்குள்ளானது.
இந்நிலையில், ஜடேஜா பந்தை சுழற்ற வந்தார். அவர் ஷாகிப் அல் ஹசன், முகமது மிதுன், முஷ்பிகுர் ரஹிம், மொசதெக் ஹோசன் ஆகியோரை சிறிய இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து அந்த அணிின் நடுகள பேட்டிங் வரிசையை தகர்த்தார். இதனால், அந்த அணி 101 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
இதையடுத்து, வங்கதேச அணியின் கேப்டன் மோர்டாசா மற்றும் மெஹதி ஹாசன் நல்ல பாட்னர்ஷிப்பை அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இந்த ஜோடி 8-ஆவது விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் மோர்டாசா 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மெஹதி ஹாசனும் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இறுதியில் வங்கதேச அணி 49.1 ஓவர்கள் முடிவில் 173 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி சார்பாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன்மூலம், இந்திய அணிக்கு 174 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.