ஆசியக் கோப்பை 'சூப்பர்-4' சுற்று: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

ஆசியக் கோப்பை 'சூப்பர்-4' சுற்றில் பாகிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியுள்ளது. 
ஆசியக் கோப்பை 'சூப்பர்-4' சுற்று: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

ஆசியக் கோப்பை 'சூப்பர்-4' சுற்றில் பாகிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியுள்ளது. 

ஆசியக் கோப்பை 'சூப்பர்-4' சுற்றின் இன்றைய போட்டியில் இந்தியா-பாகிஸ்தான், வங்கதேசம்-ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் விளையாடின. 

இதில், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ஃபிராஸ் அகமது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக இமாம்-உல்-ஹக் மற்றும் ஃபகார் ஸமான் ஆகியோர் களமிறங்கினர். 

இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசியதால் அந்த அணி தொடக்கத்தில் ரன் குவிக்க சற்று திணறியது. 8-ஆவது ஓவரிலேயே பந்தை சுழற்ற வந்த சாஹல் இமாமை ஆட்டமிழக்கச் செய்தார். 

அதன்பிறகு ஓரளவு அதிரடி காட்டத் தொடங்கிய ஸமானை குல்தீப் யாதவ் ஆட்டமிழக்கச் செய்தார். பாகிஸ்தானின் முக்கிய பேட்ஸ்மேனான பாபர் அஸாம் 9 ரன்களில் ரன் அவுட் ஆனார். குறுகிய நேரத்தில் டாப் - 3 வீரர்களை இழந்து அந்த அணி 58 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடிக்குள்ளானது.

இதையடுத்து, கேப்டன் சர்ஃபிராஸ் மற்றும் மாலிக் அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த ஜோடி 4-ஆவது விக்கெட்டுக்கு 107 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், சர்ஃபிராஸை குல்தீப் யாதவ் ஆட்டமிழக்கச் செய்தார். 

இவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஆசிஃப் அலி மாலிக்குடன் இணைந்து அதிரடியில் மிரட்டினார். இதனால், அந்த அணியின் ஸ்கோர் 250 ரன்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரைசதம் அடித்து நம்பிக்கை அளித்து வந்த மாலிக் 78 ரன்கள் எடுத்திருந்தபோது பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து ஆசிஃப் அலியும் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால், அந்த அணியின் ரன் குவிப்பு வேகம் கடைசி கட்டத்தில் குறைந்தது. 

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 237 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பில் பும்ரா, சாஹல் மற்றும் குல்தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம், இந்திய அணிக்கு 238 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

பின்னர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோர் ஆரம்ப முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிறப்பாக விளையாடிய இருவரும் சதம் அடித்தனர். ஷிகர் தவான் 114 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் ஆவுட் முறையில் வெளியேறினார்.

தொடர்ந்து ராயுடுவுடன் இணைந்து விளையாடிய ரோஹித் சர்மா இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 39.3 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து இந்திய அணி வெற்றிக்கான இலக்கை எட்டியது. ரோஹித் சர்மா 111 ரன்களுடனும், ராயுடு 12 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com