இலங்கையில் நடைபெற்ற மூன்றாவது மகளிர் டி 20 ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடர் இலங்கையில் கட்டுநாயகே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்தியா வென்ற நிலையில், இரண்டாவது ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை மூன்றாவது ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பீல்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் ஆடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 131 ரன்களை எடுத்தது. கேப்டன் சமரி அட்டப்பட்டு 28, சசிகலா சிறிவர்த்தனே 35, நில்காஷி டி சில்வா 31 ரன்களை குவித்தனர். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இந்திய அணி தரப்பில் அருந்ததி ரெட்டி, ஹர்மன்ப்ரீத் கெüர் தலா 2 விக்கெட்டையும், அனுஜா பட்டீல், ராதா யாதவ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய இந்திய அணி 18.2 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 132 ரன்களுடன் வெற்றி பெற்றது. ஜெமியா ரோட்ரிக்ஸ் அபாரமாக ஆடி 40 பந்துகளில் 57 ரன்களை குவித்து வெற்றிக்கு வித்திட்டார். கேப்டன் ஹர்மன் ப்ரீத் கெüர், 24, வேதா கிருஷ்ணமூர்த்தி 11 ரன்களை எடுத்தனர்.
இலங்கை தரப்பில் சமரி அட்டப்பட்டு 2 விக்கெட்டையும், உதேசிகா, சசிகலா, கவிஷா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதன் மூலம் 2-0 என தொடரில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.